Monday, June 27, 2005

தேடல் –- நிறைவுப் பகுதி

" பம்ப் செட்ல குளிச்சாச்சு... அதோ உன் அம்மாவும் குளிசுட்டு வறா... இப்ப மணி ரெண்டு... ஐஞ்சு மணிக்குள்ளாற வேணுங்கறத சாப்டுக்குங்க... இதோட அடுத்த வாரம் தான் .. புறிஞ்சுதா? இங்க மண்டைய மண்டைய ஆட்டிட்டு நான் அந்தப் பக்கம் போனதும் வரப்ப விட்டு இறங்கி வயல்ல வாய் வச்சீங்க... நடக்கறதே வேற.. என் செல்லம்.. என் கன்னு குட்டி.. போ.. போயி வேணுங்கற புல்ல மேஞ்சுக்கோ.."

மேற்படி கொஞ்சல்ஸ் எங்கள் வீட்டு கன்றுக்கு என் அப்பாவிடமிருந்து கிடைத்தவை.
என் அப்பாவிடம் இருந்து மூன்று முத்தங்களைப் பெற்றுக் கொண்ட எங்கள் வீட்டு பாக்ய லக்ஷ்மி அவரது தோளில் தன் முகம் தேய்க்கும், காது மடல்களை கூர்மையாக்கி “கவனிக்கிறேன்” என்று உடல் மொழியால் உணர்த்தும்.

பசுவுக்கும் அதன் கன்றிற்கும் என்ன மொழி புரியும்? ஆனாலும் எங்களைக் கொஞ்சுவதைவிட ஒரு பிடி அதிக வாஞ்சையுடன் எங்கள் வீட்டு பசுவையும் அதன் கன்றுகளையும் கொஞ்சி வளர்க்கும் என் தந்தையின் அன்பில், ஆதூரத்தில் நான் உணர்ந்திருக்கின்றேன் தெய்வீகத்தை.

என் அப்பாவின் அன்புக் கட்டளையை புரிந்துக் கொண்டு, மணிலாவும், நெற் பயிரும் எவ்வளவுதான் செழுமையாய் விளைந்து கண்களைக் கவர்ந்தாலும், கண்களுக்கு தெரியாத தர்ம நியயங்களுக்கு உட்பட்டு... புல்லை மட்டுமே மேய்ந்து, வரப்பை விட்டு வயலில் ஒரு வாய் கூட மேயாத எங்கள் வீட்டு கன்றுகளிடம் கண்டிருக்கிறேன் – அந்த தெய்வத்தை.

--------------------------------------------------

" மொத்தம் அஞ்சு பொட்டி... அஞ்சுலயும் தலா இருபத்தி நாலு கம்பிங்க... இங்கதான் என்னோட ஷெல்ப்ல வச்சிட்டு தூங்கப் போறேன்.. மவளுங்களே.. நாளைக்கு காலைல எழுந்து எண்ணிப் பாப்பேன்... ஒரு கம்பி குறைஞ்சாலும் நாளைக்கு தீபாவளி சாமிக்கு இல்ல... உங்களுக்குத்தான்... அதுவும் என் கையாலத்தான் .. புறிஞ்சுதா? - நின்று மிரட்டிவிட்டு தூங்கப் போனான் எங்கள் வீட்டு தீவட்டி தடியன். இத்தனைக்கும் என்னைவிட நாலு வயது சிறியவன்.

அது என்ன ... தீபாவளின்னா .. ஆம்பிளைப் பிள்ளைங்க தான் அதிகமா வெடி வெடிக்கனும்.. பொம்பளை பிள்ளைங்க நின்னு வேடிக்கை பார்க்கணுமா?

குடும்பத்திலே ஒரு மத்யஸ்த்தம்.. பாகப்பிரிவினைன்னு வரும் போது தர்ம நியாயம் வேணாமா?

தீபாவளிக்கு முதல் நாளிரவு நடந்த, மிக நீள சண்டை காட்சிகள் நிறைந்த பட்டாசு பாகப்பிரிவினையில் - அம்மா. அப்பா, சித்தி, சித்தப்பா அத்தனைபேரும் . . . அன்னியாயக் காரர்கள்.. எனக்கும் என் தங்கைக்கும் நாலு பெட்டி மத்தாப்பு.. ஆனால் என் தம்பிக்கு மட்டும் ஐந்து பெட்டி மத்தாப்பு.

பெட்டிங்க தானே உங்க கணக்கு...? பெட்டிங்க அப்டியே இருக்கும்.. உள்ள இருக்கற மத்தாப்புங்க..? தோல் இருக்க சுளையை முழுங்கறோம் இருங்க...- என்று கறுவிக் கொண்டோம் நானும் என் தங்கையும்.

எங்கள் தம்பி தூங்கியதும் அவனது பாகத்தின் பெட்டிகளிலிருந்து தலா இரண்டிரண்டு மத்தாப்புகளை திருட திட்டமிட்டதை எங்கள் திருட்டு முழிகளிலிருந்து புரிந்துக் கொண்ட என் தம்பியின் மிரட்டல் தான் மேற்படி நீங்கள் படித்த கொலை மிரட்டல்.

ஆனால் மறு நாள்

தீபாவளி விடியல் கருக்கலில் வாசல் விளக்குப் பிறையில் அகல் விளக்கை ஏற்றி எங்கள் தம்பி ஒவ்வொரு வெடியாக, சரமாக வெடிப்பதை, எங்கள் பட்டாசுக் கட்டுகளைப் பிரிக்கக் கூடத் தோன்றாமல் வேடிக்கை பார்த்து நின்றோம்.. அவனது பாகத்தை அவன் வெடித்து முடித்து விட்டால்... அவன் வெறுமையாய் நிற்கக் கூடாதேயென என் பாகத்தை தந்து விடலாம் என நானும், அவளது பாகத்தை தந்து விடலாம் என என் தங்கையும் உள்ளுக்குள் நினைத்தபடி வாசல் திண்ணையில் நின்றிருக்கையில்... எங்கள் கழனி வேலையாள், எங்கள் வயதொத்த அவரது மகனையும், மகளையும் அழைத்துக்கொன்டு வருவது தெரிந்தது. அருகில் வந்த போதுதான் புரிந்துக்கொண்டோம் அவர்களது உதடுகள் புன்னகைத்தாலும்.. கண்கள் ஏக்கத்தால் கசிந்தன என்று.

ஒரே ஓட்டமாக உள்ளே ஓடிய என் தம்பி அவனது பங்கில் பாதியை கொண்டுவந்து அவ்விருவருக்கும் தரும் முன்பே நானும் என் தங்கையும் எங்களது பங்குகளில் பாதியை கொடுத்துக் கொண்டு இருந்தோம். அங்கே... அந்த இடத்தில்.. அந்த தருணத்தில் எங்கள் ஐவரின் சின்னஞ் சிறு பிஞ்சு கைகளில் இறைவன் இருந்திருக்கலாம்..

" நீ வருவன்னு தெரியும் முனியா.. அதால உன் பிள்ளைங்களுக்கும் சேர்த்து ஒரு பாகம் போட்டு .. இதுங்களுக்கு தெரியாம எடுத்து வச்சோம்.. இந்தா இனிப்போட சேர்த்து பட்டாசை பிள்ளைங்களுக்கு கொடு " - என்று தந்த என் அம்மா, சித்தியின் கண்களில் இறைவன் இருந்ததாகத்தான் தோன்றியது எனக்கு. ..

" இதெல்லாம் எதுக்கு அம்மா.. எதோ வள்ளி புதுசா அதிரசம் பண்ணா.. ஐயா வூட்டு பிள்ளைங்க ஆசையா சாபிடுமேன்னு கருக்கல்ல கொடுத்தனுப்ச்சா - என்று தன் மூங்கில் கூடையில் அதிரசங்களை பொதிந்து, மூன்று மைல் நடந்து அந்த விடியலில் எங்கள் வாசலில் வந்து நின்ற எங்கள் முனியனின் நெஞ்சினில் இறைவன் இருப்பதாகத் தோன்றியது எனக்கு....

மேற் சொன்ன அத்தனை நிகழ்வுகளையும்... மௌனமாய்.. சின்ன சின்ன காற்றுச் சலனங்களுடன் பார்த்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டு அகல் விளக்கின் சுடரில்...இப்போதும் இருக்கின்றான் இறைவன் .

--------------------------------------------------

"" பேப்பர்க்கு எழுதிப் போடணும்.. இவங்க எல்லாம் அனுபவிப்பானுங்க... நமக்குன்னா குடுக்க மனசு வராது... இதெல்லாம் சரிப்பட்டு வராது.. ஜி. எம்.. ஒழிகன்னு கோஷம் போட்டு ஸ்ட்ரைக் பண்ணணும்ப்பா.. நம்ம வயத்துல அடிசுட்டு.. இவங்க மட்டும் நல்லா இருப்பாங்களா?""

வக்கிர மனம் கொண்ட நிர்வாகிகளை தாக்கிப் பேசி, உள்ளிருப்பு வேலை நிறுத்தம், கருப்பு பட்டை அணிந்து கோரிக்கைகளை முன் வைத்தல்.. அடையாள உண்ணா விரதம் ( உண்மையான உண்ணா விரதம் தான்) இருந்தும் மசியாத நிர்வாகத்தின் மேல் நிஜமாகவே கோபம் வந்தது.

நியாயமாக மூன்று வருடங்களுக்கு முன்பே தரவேண்டிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு எதையுமே தராமல்.. எதேனும் சாக்குப் போக்கு சொல்லும் எங்கள் ஜி. எம்.. கண்டிக்கத் தக்கவர்தான்.

" அவன் மட்டும் தனியா மாட்னான்... மவனே நானே போட்டுத் தள்ளிடுவேன்.. வேணான்டா கும்பலா அவனை போட்டு அமுக்கியே நசுக்கனும்..."" - சக ஊழியர்கள் பேசப் பேச... அவர் (ன்) கும்பலில் மாட்டினால், என் பங்கிற்கு ஒரு அடியாவது அடிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

மறு நாள்

"" வேன் எடுங்கப்பா.. யார் யார் பிளட் டொனேட் பண்ணப் போறது? அவங்க முதல்ல வண்டில ஏறுங்க.. சீக்கிரம்.. ஆப்பரேஷன் வெயிட்டிங்.. பணம் இருக்கோ என்னவோ?.. யார் யாருக்கு எவ்ளவு தரமுடியுமோ தாங்க... குணமாயி வந்தப்புறம் வாங்கிக்கலாம்..""- பரபப்புடன் யூனியன் லீடர் தலைமையில் மொத்தம் இருபத்தியோர் பேர் தங்களது நிர்வாகிக்காக இரத்தம் தர முன் வருவார்கள் என அந்த தனியார் மருத்துவ மனை எதிர் பார்க்கவில்லை.

இதுதான் சந்தர்ப்பம் என்று இருபது பேரிடமும் இரத்தம் தானமாக பெற்றுக் கொண்டது. விடுபட்ட அந்த இருபத்தியோராவது நபர் வேறு யாரும் இல்லை.. நான் தான். “ இந்தாங்கம்மா.. இதுல எழுதி இருக்கிற வைட்டமின் டானிக்கை தவறாம சாப்டுங்க.. ரொம்ப அனீமிக்கா இருக்கீங்க... நீங்கல்லாம் பிளட் டொனேட் பண்ண முடியாது.. இந்த அனீமிக்கை இப்படியே விட்டீங்கன்னா நியாபக மறதி வந்துரும் “ – என்ற அட்வைசை கேட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.

மூன்று வருடங்களாக சம்பளமே உயர்த்தாமல், தொழிலாளர்களுக்கென ஒரு நெல் முனையளவும் நல்லது நடக்க விடாத ஒரு உயரதிகாரிக்கு மாசிவ் ஆர்ட் அட்டாக் என கேள்வி பட்ட அடுத்த நொடி, எதையும் மனதில் வைக்காமல், தங்கள் இரத்தத்தையும், பணத்தையும் வாரி வழங்கிய எங்கள் அலுவலக மக்களின் மத்தியில் நான் நின்ற போது நான் உணர்ந்தது வேறு என்னவாக இருக்க முடியும்?

அதேதான்.. அந்த தெய்வீகத்தைதான் நான் அங்கே உணர்ந்தேன்.

--------------------------------------------------

யாரும் நம் கையை பிடித்து அழைத்துச் சென்று வழி காட்ட முடியாத ஓர் இடம் தெய்வம் வசிக்குமிடம். கண்டவர் விண்டிலர்... விண்டவர் கண்டிலர்.. நாமே உணர்ந்து உறைவதுதன் இறைவன்.

தொப்புள் கொடி நறுக்கி, மருத்துவர் முதுகில் தட்டும் தட்டில், தானாகவே மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் முதல் சுவாசத்தை யாரும் ஒரு குழந்தைக்கு சொல்லித்தருவதில்லை.. அது தானே தினறி, அழுது, பின் சுவாசிப்பதைப் போல.. நாமும் நமக்கு நாமே தினறி, யோசித்து பின் உணர்வதே தெய்வீகம்.

சுவாசிப்பதைப் போல தெய்வத்தை உணர்வதும் – இயல்பாய், தானாய் வர வேண்டும். அவ்வாறு வரப் பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள் அல்லவா?

தெய்வீகம் என்பது நமக்குள் நாம் நிகழ்தும் தேடல்.. சரியா?

Sunday, June 05, 2005

தேடல் - 3

தேடல் - 3


நல்ல வேள.... நீ என் மேல விழறத்துக்கு முன்னாடி நான் எழுந்துட்டேன் -– என்றான் என் தம்பி
விழுந்திருப்பேன்.. அதுக்குள்ள டீச்சரம்மா பிடிச்சுகிட்டாங்க -– என்றேன் நான்


இருளோவென்றிருந்த அந்த அறையில் சிகப்பு கண்ணாடி பேப்பர் சுற்றிய பத்து வாட்ஸ் பல்ப் மட்டுமே எரிந்துக் கொண்டிருந்தது. தடுக்கி விழுந்து தாராந்து போக இருந்த எங்களை தெய்வம் போல் அந்த அம்மையார் காப்பாற்றினார்.

ஆன்மீகம் ஆரம்பமாகியது

நீங்கள் யார்?

நான் பத்மப்ரியா, இவன் என் தம்பி

அது உங்கள் உடலுக்கான பெயர் -– நீங்கள் யார்?

( என்ன இழவுடா இது) – நாங்க நாங்கதான் - என்றேன்

நீங்கள் என்றால் உங்கள் ஆத்மா... ஆத்மா உருவமில்லாதது – பரம பிதா வான் வெளியில் இருக்கிறார் அவரோடு ஐக்கியமாக தியானம் ஒன்றுதான் வழி . . .

வீட்டில் சிறுவயதில் சின்ன சின்ன கதைகள் வழியாக பாட்டியும் , தாத்தாவும் . அம்மாவும், அப்பாவும் போக வரச் சொல்லித்தந்த நல்லொழுக்கங்களை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துவதைப் போல அவ்வம்மையாரின் ப்ரசங்கம் இருந்தது. பொய் சொல்லாமை. கோபம், காமம் விலக்கல், களவு செய்யாமை, கூடா நட்பு... இன்னும் பல

இதெல்லாம் எங்க வீட்ல ஏற்கெனவே சொல்லித் தந்திருக்காங்க - என்றேன்

நீங்க அதெல்லாம் மறந்திருப்பீங்க, இப்ப நீங்க கடை பிடிக்கறதில்லை – என்றார்.

இல்ல.. இல்ல .. நாங்க அதை கடை பிடிக்கறோம் என்றேன்

முறைத்தார். ... இழுத்து ஒரு அறை விடுவார் போல இருந்தது

அடக்கி வாசி -– என்பதைப் போல தம்பி முறைத்தான்.

இன்னைக்கு கிளாஸ் இத்தோட முடிந்தது நாளைக்கு வாங்க என்றார்

தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியில் வந்தோம்.

ஆன்மீகம் சொல்லித் தருவதென்றால் டியூப் லைட்டே போட்டுக்க கூடாது என்று எந்த மடையன் சொல்லித் தந்தான் எனத் தெரியவில்லை. மாயாஜால மந்திரக் குகை எபக்ட்டோட சொல்லித்தந்தாதன் மண்டைல ஏறும்னு நினைச்சிருக்காங்க.

இந்த மாதிரி கிளாஸ் அட்டென்ட் பண்ண பிடிக்காமத்தான் கலையியல் இளைஞி பட்டத்துடன் நிறுத்தியாச்சு...திருப்பியும் அதே மாதிரி கிளாசா..?தப்பிக்க காரணங்களை தேடியது மனது.

வயத்தை பிடிச்சுகிட்டு வலிக்குதுன்னு சொன்னாலும் – பூலோக ராட்ச்சசி, புண்ணியவதி அம்மா பிசாசா விடுவாள்..? பூ. ஊதுபத்தி, சாம்பிரானி மட்டி எல்லாம் எடுத்து கொடுத்து கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினாள் அம்மா.

அடுத்தவரது ஆன்மீக முன்னேற்றங்களில் தலையிடு வதில்லை என்ற கொள்கை பிடிப்போடு இருக்கும் அப்பா எங்களுக்கு நிகழ்ந்த இக் கொடுமைகளை கண்டு கொள்ளவே இல்லை.

எல்.கே.ஜி. கிளாசுக்கு போவதைப் போல கிளம்பினோம் – தம்பியும் தான்..வயசுப் பொண்ணை தனியா மடத்துக்கு அனுப்றதா? கிளம்புடா .. ம் .. ஆகட்டும் என்றாள் அம்மா.

என்னை கொலை செய்துவிட்டு சிறைச் சாலைக்குப் போகத் தயாராக இருந்தான் என் தம்பி.. ஆனால் எதிர் பிளாட் காவ்யா கொஞ்சம் மடிவாள் போல இருந்ததால் என்னை கொலை செய்யும் ஐடியாவினை தற் சமயம் நிறுத்தி வைத்தான்

ஆன்மீகத்தில் ஈடுபாடு இருப்பதாக காட்டிக் கொண்டால் தானே காவ்யாவையும் காவ்யாவின் அம்மாவையும் கவர்ந்திழுக்க முடியும் என மடத்தனமாக நம்பினான்.

இன்று அந்த அம்மையாரையே காணோம் – அப்பாடா தப்ச்சோம் என்று நினைத்து முடிப்பதற்குள் நீங்கதான் புது ஸ்டூடன்ட்ஸ்ஸா என்றார் ஒரு நடுத்தர வயதுக்காரர்..
மஞ்சள் பைஜாமா ஜிப்பாவில், சமீபத்தில் செத்துப் போனா ஆதிகால ஜெமினி கணேசனை நினைவூட்டினார்.

ஆமாம் - என்றோம் கசாப்பு ஆடுகளைப் போல
உள்ள வாங்க என்றார். உத்தேசமாக, குத்துமதிப்பாக, தோராயமாக போய் உட்கார்ந்தோம்.

நீங்கள் யார் ? என்றார்

ஆகா ஆரம்பிச்சிட்டாருயா ஆரம்பிச்சுட்டாரு... சுதாரித்துக் கொண்டோம்

இந்த கிளாஸ் நேத்தே நடத்திட்டாங்க என்றோம் ஒரே குரலில்

இல்லை ரெப்ரஷ் பண்ணிக்கலாம் -– என்றார் எதோ கோகோ கோலா, மிராண்டா குடிக்கப் போவதைப் போல

அதே விளக்கங்கள் அதே பாடங்கள் ஆனால்..அவன் மட்டமானவன் என்பதை அவனது பார்வைகள் சென்ற இடம் உணர்த்தியது. சட்டென எழுந்துக்கொண்டான் தம்பி.. வயத்தை வலிக்குது கிளம்பலாம் என்றான்.. அப்பாடா என்றிருந்தது எனக்கு.. வேகமாக வெளியில் வந்தோம்.

என் பின் பக்கம் வந்தவர்.. எங்கிருந்து வருகின்றீர்கள் என்றார்.

நடத்திய பாடத்திலிருந்து கேள்வி கேட்கிறார் என நினைத்து – அந்த பரமாத்மாவிலிருந்து வருகின்றோம் - என்றேன்

விழுந்து விழுந்து சிரித்தது அந்த லூசு. போதாத குறைக்கு "ஜோவியலா பேசறீங்க... இ லைக் இட் என்றது. தம்பியின் முறைப்பு என் முதுகை துளைத்தது.

உங்க வீடு எங்க? என்றது -–

உலக பந்தங்களில் இருந்து பற்றருக்க, வீடு பேறு அடைய வழி சொல்லித்தரும் இடத்தில் .. என் வீட்டைப் பற்றிய விவரங்கள் எதற்கு..வேண்டுமென்றே தவறான விலாசத்தை தந்தேன். . . அதை பற்றியும் விலாவாரியாக கேட்டுக்கொன்டது..

எங்கள் பின்னாடியே கிளம்பி வந்து எங்கள் வீட்டை கண்டுபிடித்து விடுமோ என்றும் பயமாயிருந்தது.

நாளையிலிருந்து வரவே கூடாது என்று முடிவெடுத்தோம். ஆனால் பக்கத்து வீட்டு மாமி புண்ணியம் கட்டிக் கொண்டாள்.மூனு நாள் கிளாஸ் அட்டென்ட் பன்னா நேரா முக்தி தான்னு சொல்றா மாமீ என்றாள் அம்மாவிடம்.

இன்னைக்கு மட்டும் போயிட்டு கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிடுங்க- – என்றாள் அம்மா.விட்டா.. இந்த கோர்ஸ் கம்ப்ளீட் பன்னிட்டோம் எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ல ரிஜிஸ்டர் பன்னிக்குவாங்களான்னு கேளும்பா.

மூன்றாம் நாள் நல்ல வேளையாக அவன் இல்லை.. அப்பாடா என்றிருந்தது. ஆனால் .. எதிர்பாராத விதமாக ஓர் இளம் வயது வாலிபர் எங்களை வரவேற்றார்.. இன்னைக்கு நான் கிளாஸ் எடுப்பேன் என்றார்.

நீங்கள் யார்..? ( போச்சுடா . . . இதே கேள்வியா?)

நாங்கள் ஆத்மாக்கள் என்றோம்.

அதைத் தொடர்ந்துஅவர் தந்த ப்ரசங்கத்திற்கும் அவரது வயதுக்கும் சம்பந்தமே இல்லை.. நறுக்குத் தெறித்தார் போல் தெளிவான விளக்கங்கள்..அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் அமைதியான தீர்க்கமான பதில்.. கை கூப்பி வணங்க வேண்டுமெனத் தோன்றியது..குருவே சரணம்..

வாசலில் ஒரே பரபரப்பு. . . வந்துட்டார்.. வந்துட்டார் என்றார்கள்.

ஜிப்பாவும் இலாமல். . .சர்ச் பாதர் அங்கியும் இல்லாமல் ஒரு விதமான தோராய தொள தொளா அங்கி அணிந்து , அதற்குள்ளேயே நடமாடி நடந்து வந்த ஒருவர், அவருக்கென போடப்பட்டிருந்த சிறப்பு நாற்காலியில் அமர்ந்தார். தூங்கி வழிந்து அவர் ஆற்றிய உரையால் அவரும் தூங்கி அனைவரையும் தூங்க வைத்தார்.

அவர் விளக்கிய விளக்கங்கள் ஏற்கெனவே தாத்தா பாட்டியால் எங்களுக்கு நடைமுறையில் சொல்லித் தரப்பட்டிருந்தன. எனவே அவரது ப்ரசங்கத்தால் பரவசமோ, புளங்காகிதமோ. வேறு எந்த மண்ணாங்கட்டியுமோ ஏற்படவே இல்லை.

நான் மூன்று, தம்பி ஏழு -– ஆக மொத்தம் பத்து கொசுக்களை மட்டுமே அவரது உறையின் நடுவில் எங்களால் அடித்துக் கொல்ல முடிந்தது.

திவ்யமா இருந்துத்து ப்ரசாதம். . . உன் பிள்ளைகள் வாங்கவேயில்லை பார்த்துக்க... என்னதான் வளர்த்திருக்கியோ போ...! என்று அம்மாவிடம் போட்டுக் கொடுப்பாள் இந்த பக்கத்து வீட்டு மாமி, அதற்காகவே கூட்டம் கலையும் போது எஸ்கேப் ஆய்டலாம் என்ற எங்களின் இரண்டு அம்ச திட்டம் திவாலாகியது.

வரிசையில் நின்று நகர்ந்து நானும் தீர்த்தம் வாங்க கை நீட்டினேன்... அந்த ஆன்மீகக் குருவிடம் இருந்து நான் எதிர்பார்த்ததெல்லாம்... குழந்தையைப் போன்ற ஒரு சிரிப்பும்.. கண்களில் தெரியும் ஆத்ம ஒளியும் மட்டுமே.. ஆனால் துரதிருஷ்டவசமாக இரண்டுமே மிஸ்ஸிங்.. தீர்த்தம் கொடுக்கும் சாக்கில் அருகில் வரும் ஒவ்வொரு பெண்ணையும் உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.. என்ன எழவுடா இது .. சே..!

தெய்வதம் என்பது காதலைப் போன்றது...உணரத்தான் முடியும்...ஒருவர் விளக்கி நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது அல்ல. தானே உணர்ந்து தானே அனுபவிப்பது தான் தெய்வீகம்.

அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அந்த அனுபவம் என்பதே நான் தான் என்றான் – -( கவியரசு கண்ணதாசனிடம் சொல்லாமல் கொள்ளாமல் திருடியது)

நான் அனுபவித்து உணர்ந்த சில தெய்வீகத் தருணங்கள் - இத் தேடலின் முடிவுப் பகுதியில்.
---------------
தொடர்ந்துத் தொலையும்
------------

Friday, June 03, 2005

அவள்

உன்னை மட்டுமே பார்ப்பவள் நான்
உன்னை மட்டுமல்ல - இந்த
ஊரையே பார்ப்பவள் அவள் - என்றாலும்
உரைப்பதில்லை உனக்கு

அவளின் அனைத்தும் இரவல்
அடுத்தவனிடம் அள்ளினாள் என்றாலும்
அலுக்கவில்லை உனக்கு அவளது ஒளி

யாரோடு யாரை ஒப்பிடுகிறாய் ?
நீ அவளையும் விரும்பித் தொலை
அதற்காக. . . . அவளோடு என்னையா?
ஓரவஞ்சனை ஒப்பிடலில் - அவளை
ஓரப்பார்வை வேறு

அவளைப் பார்த்துக்கொண்டே
நான் வேண்டும் என்கிறாய்
என்னைப் பார்த்துக் கொண்டே
அவள் வேண்டும் என்கிறாய்

வெட்கமின்றி வெறிப்பவள் எதிரில்
வேண்டுமென்றே என்னைக் கொஞ்சுவாய்
வேறுபக்கம் போகாமல் அவளும்
வெளிச்சம் வேறு போடுவாள்

உன்னைப் பார்க்க இயலாத - அவளின்
அந்த மூன்று நாட்கள் மட்டுமே
நீ எனக்கே எனக்கு

நான் இருந்தாலும் போனாலும் -
இல்லை இல்லாமலேயே போனாலும்
நேர்தியாய் உன்னோடு மாலையில் அவளுன்டு

எனவே . . .

அப்புறப்படுத்து. . .அவளை
அதுதான் அந்த அழகிய நிலாப் பெண்ணை

நீ, அவள், நான் என
கோஷ்டி காதல் அனுசரிக்க
என்னால் இயலாது.