Tuesday, May 23, 2006

ம.. திரு நிச்சயிக்கப்படுகின்றன- அத்யாயம் 3

"அப்பா.. இந்த இடத்தியே முடிச்சுருங்கப்பா.. "– தனது வாழ்க்கையின் அந்திமபயணத்திற்கான முடிவினை.. நெஞ்சம் வலிக்க.. தீனக் குரலில் சொல்லி விட்டாள்.

அவ்வளவுதான்..ஆரம்பித்துவிட்டனர் வேலைகளை..ஜம்பமாய் மூன்று நட்சத்திர ஹோட்டலில் மாலைப் பொழுதில் நிச்சய தார்த்தம்..வண்ண விளக்கொளியில் வாசனை திரவியம் தெளிக்கப்பட்ட ஏ.சி. ஹாலில் நலங்கு வைத்து நிச்சய தார்த்தம் முடிந்தது.

நிச்சயத்திற்கு வந்திருந்த அத்தனை உறவுகளும், நண்பர்களும் மாப்பிள்ளையை பார்த்ததும் விக்கித்து,பேச நா எழாமல் அமர்ந்திருந்தனர். சில பேர் சாப்பிட பிடிக்காமல் பவித்ராவின் அருகில் வந்து,சோகத்தை மறைக்கத் தெரியாமல் “ வரோம்மா..” என்று மட்டும் சொல்லிச் சென்றனர். உண்மையான சொந்தமெது போலியான பந்தமெது என்பதை புரிந்துக் கொண்டாள். எது புரிந்தால் என்ன..புரியாவிட்டால் என்ன.. அவள் வாழ்க்கை அஸ்தமிக்க துவங்கியது. அந்த இருளில் அவள் நிழலாகிப் போனாள்.

“ என்ன கோபாலன் இது...? பையன் ரொம்ப குள்ளம்.. பொன்னு வேற நல்ல ஹைட் வெயிட்டா இருக்கா..கொஞ்சம் நிதானமா பார்த்திருக்கலாமில்ல..? – ஆத்மார்த்தமாய் பழகிய குடும்ப நண்பர் ஆதங்கபட்டு கேட்ட கேள்வியை எதிர் பார்க்கவில்லை அப்பா.. தம்பிதான் அவரை சாப்பிட அழைத்து செல்வதுபோல் விலக்கி கொண்டு சென்றான்.

“என்ணண்ணா இது.. நான் கிளம்பி வற்றத்துக்குள்ள இப்டி அவசரப் பட்டுட்ட..?
பூனாவிலிருந்து வந்த சித்தப்பா நிச்சயம் முடிந்த மறு நாள் கேட்ட கேள்விக்கு

“ பவித்ராவுக்கு பிடிச்சிடுச்சி..அப்புறம் என்ன..? நானும் சரின்னுட்டேன், நாள் நல்லாருக்குன்னு நிச்சயம் வச்சுட்டேன்..”

“ நான் வந்தப்புறம் முடிவு சொல்லியிருக்கலாம்ல..? சரி .. என்ன படிச்சிருக்கான்.. எங்க வேலை செய்யறான்.

"பி.ஏ. முடிச்சுட்டு..ஸ்கூல்ல வாத்யாரா இருக்கான்"

"என்ணண்ணா இது..? நம்ம பவி எம்.ஏ. சரி விடு படிப்பு வந்து என்ன செய்யப் போவுது... பையன் நல்லவனா இருந்தா படிப்பு முக்கியமா?சரி எவ்ளோ வருஷம் சர்வீசு.. என்ன சம்பளம்.. இங்க பக்கத்துல இருக்கற ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் கிடைக்குமா? உனக்கு பக்கத்திலேயே பவி இருந்தா உன்னையும் பார்த்துப்பா"

“மண்ணடியில வடக்கத்திகாரங்க நடத்ற ஸ்கூல்ல வேலை செய்யறான்.. அவங்க பிரான்ச் இங்க இருக்கான்னு தெரியல..சம்பளம் என்னா..ஒரு ரெண்டாயிரம் தர்றாங்களாம்.. சாயந்திரம் வீட்ல டியுஷன் எடுக்கறானாம்"

தரையில் கால் நழுவுவதைப் போல் இருந்தது பவித்ராவுக்கு“ வாத்யாருன்னு சொன்னீங்களேப்பா..? ப்ரைவேட் ஸ்கூல்னு சொல்லவே இல்லயேப்பா? இரண்டாயிரம் தான் சம்பளமா? அதை வச்சு நான் என்ன குடும்பம் நடத்தறது?- அழுதபடியே கேட்டாள் சமையல் அறையில் இருந்து.

“ வாத்யாருன்னு நான் சொன்னேன்.. எந்த ஸ்கூல் வாத்யாருன்னு நீ கேக்கவே இல்ல..? ஏன் நீ சம்பாதிக்கற இல்ல? அது போதாதா..? கல்யாணத்துக்கு அப்புறம் உன் சம்பளத்த எனக்கா தருவ?"

எவ்வளவு சாமர்த்தியமான பதில், வார்த்தைகளை வைத்து விளயாடும் லாவகம். துவண்டு போனாள்.. நிற்க முடியாமல்.. சுவரோடு தேய்ந்து தரையில் உட்கார்ந்தாள்..இறந்து போன தாயை நினைத்து அழுதாள்..அழுது கொண்டே சமைத்தாள்.. பத்து பதினைந்து விருந்தாளிகளுக்கு உணவிட வேண்டுமே.

“ அண்ணா.. இது என்னமோ என் மனசுக்கு சரியா படல.. அவன் படிக்கவும் இல்ல.. நிரந்தரமில்லாத ப்ரைவேட் வேலை.. வீட்டுக்கு கடைகுட்டி.. எட்டாவது பையன்.. சொத்தும் இல்லை.. எத வச்சு நம்ம பவியை நீ அவனுக்கு தரன்னு சொன்ன?’’

“ நீ சும்மா இருடா.. வயசு பொண்ணை வீட்ல வச்சுகிட்டு.. நெருப்ப மடில கட்டிகிட்ட மாதிரி இருக்கு”

“அதுக்காக ... அந்த நெருப்ப என் தலையில வச்சிட்டீங்களாப்பா..?- என கேட்க நினைத்து அழுகையோடு சேர்த்து அந்த கேள்வியையும் விழுங்கினாள்.

“ சரி..எவ்ளோ நகை கேட்டாங்க?“ அவங்க எதுவுமே கேக்கல.. நானா இருவது சவரன் போடறேன்னு சொன்னதும்.. உடனே சரின்னுட்டாங்க.

சரி என்றுதான் சொல்வார்கள்.. நல்ல திடகாத்திரமாக.. கவர்ன்மென்ட் உத்யோகத்தோடு..பிக்கல் பிடுங்கல் இல்லாமல் வீட்டுக்கு ஒரே பெண்ணாக..குள்ளமான தனது மகனை மணக்க ஒருத்தி வரும் போது..வேண்டாம் என்பார்களா?

“ அண்ணி சாவுபடுக்கைல கிடந்தப்போ.. பவிக்கு ஐம்பது சவரன் சேர்த்து வச்சிருக்கேன்.. நல்ல இடமா பாத்துமுடி தம்பின்னு சொல்லுச்சேன்னா..!???

“ அவ சொல்லிட்டு செத்துட்டா..இங்க நான் தானே பாக்கணும் எல்லாம். இருபது போடறேன்னதும் அவங்களே சரின்னுட்டாங்க. நிச்சயம் ஆனதும் அதுங்களுக்கே பேராசை தானே வந்துரும்...போதாத குறைக்கு நீயே சொல்லி குடுத்திறு”

பவித்ராவின் அம்மா அனைத்திலும் சரி சமமாக,எண்ணி எண்ணி சேர்த்து வைத்தாள்..இவளுக்கு ஐம்பது சவரன் என்றால் ..வரப்போகும் மருமகளுக்கும் ஐம்பது. அவற்றோடு அம்மாவின் நகைகளே ஒரு நாற்பது சவரன் இருக்கும். ஆனாலும் பவித்ராவிற்கென சேர்த்து வைத்திருந்ததில் முப்பது சவரனை நிறுத்திக் கொள்ளும் அப்பாவை என்ன கேள்வி கேட்பது? அப்படி கேள்வி கேட்டால் மட்டும் தந்து விடுவாரா?வாழ்கையே முடிந்து விட்டது.. பிறகு நகை எதற்கு..? பணம் எதற்கு.

“அதை விடு அண்ணா.. பையன் குள்ளமா இருக்கானே.. என்ன ஏதுன்னு விசாரிச்சியா? அவன் அண்ணங்க எல்லாம் நார்மலாத்தானே இருக்காங்க.. அப்பா அம்மா கூட நார்மல் ஹைட்டா இருக்காங்க... இவன் மட்டும் ஏன் குள்ளம்? கண்ணாடி அதிக பவர் இருக்கும் போல தெரியுதே?

“கடைசீ.. ஈவிடை பொறப்பு.. சத்து குறைச்சல்.. வேற ஒன்னும் இல்லடா..”

“இல்ல.. அவங்க குடும்பத்துல வேறயாராவது இப்படி குள்ளமா இருந்தா.. பரம்பரை பரம்பரையா ஏதாவது ஒரு புள்ளைக்கு அந்த வாகு வரும்னு சொல்வாங்களே.. அதை விசாரிச்சியா?

ஐயோ.. கடவுளே...இந்த திசையில் நான் சிந்திக்கவே இல்லையே? நாங்களிருவரும் வெளியே போனால் அனைவரும் கேலி பேசுவார்களே.. தன்னை இளக்காரமாகப் பார்ப்பார்களே என்று மட்டும்தான் இது வரை நினைத்து பயந்திருந்தாள்.. இப்போது.. பரம்பரை பரம்பரையாக அப்படி ஜீன் வருமா? என் குழந்தைகள் குள்ளமாக பிறப்பார்களா? ஐயோ.. நான் என்ன செய்வது? என் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது.. யாருடைய கேலிக்கும் ஆளாகக் கூடாது.

“அப்பா என்னப்பா இது... இந்த ஆங்கிள்ள நீங்க யோசிக்கவே இல்லயாப்பா..? நாந்தான் சின்னவ.. எனக்கு எதுவுமே தோணல?“

"இன்னும் பத்தாம் பசலியாவே பேசிட்டு.. இப்போ எவ்ளவோ மருந்து மாத்ரைங்க வந்துருச்சு “ – என்றான் தம்பி.

“எத்தனை பொருத்தம் இருக்கு ஜாதகத்துல..?“

"ஜாதகம் இல்லன்னுட்டாங்க, நான் மெனகெட்டு மனசு தாங்காம பேர் ராசி மட்டும் பார்த்தேன்..எல்லாம் நல்லாத்தான் இருக்கு..மனசு நல்லார்ந்தா எல்லாம் நல்லா இருக்கப் போவுது”

அமர்ந்திருந்த நாற்காலியை வேகமாய் தள்ளிவிட்டு எழுந்த சித்தப்பா,
“சரி .. நான் கிளம்பறேன் அண்ணே.. பவி..சித்தி கிட்ட சொல்லி பெட்டி படுக்க எடுத்துட்டு வர சொல்லு” என்றார்.

"சாப்டுட்டு போங்க சித்தப்பா..ப்ளீஸ்"

சித்தப்பா மெல்ல அருகில் வந்தார்..இரண்டு கைகளால் பவித்ராவின் நெற்றியை அழுத்தி பிடித்தார்.. “ நல்லா இருப்பம்மா நீயி.." என்றார்.

சாப்பிடாமல் அப்பொழுதே புறப்பட்டு சென்ற சித்தியும் சித்தப்பாவும் இவளது கல்யாணத்திற்கு வரவே இல்லை.

இவளை பத்து வயது வரை அன்போடும் அரவணைப்போடும் வளர்த்த அந்த சித்தப்பா தன் கூடவே இருந்தால் ஆறுதலாயிருக்கும் என நினைத்தாள் பவித்ரா. முதன் முதலில் ஸ்கூல் வாசலில் இவளை விட்டுவிட்டு வெகு நேரம் கேட் அருகில் நின்றிருந்த சித்தப்பாவின் தோற்றம் நினைவுக்கு வந்தது. அவரின் கை விரல்களை பற்றிக் கொண்டு வயலுக்கு நடந்து சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன. வளரவே வளராமல் ஸ்கூல் பிள்ளையாகவே இருந்து விட்டால் எவ்வளவு நிம்மதி, எவ்வளவு சந்தோஷம்.

தொடரும்...

Friday, May 12, 2006

ம.. தி.. நிச்சயிக்கப் படுகின்றன- அத்யாயம் 2

"ஆபிஸுக்கு சைக்கிள்ள போ.. நாலு ஸ்டாப்பிங்குக்கு எதுக்கு பஸ்ஸு? "..மத்யானம் ஆபீஸ் கான்டீன்ல சாப்ட்டுக்க..சப்ஸிடிய எதுக்கு வேஸ்ட் பன்ற?-

எல்லாம் அப்பாவின் ஆணை. காலையில் எழுந்து ஓடி ஆடி என்னதான் சுவையாக சமைத்தாலும் அதை சாப்பிடும் பாக்கியம் அவளுக்கு இருந்ததில்லை. காலையில் எலுமிச்சம் பழச் சாறு.மதியம் வாயில் வைக்க வழங்காத கான்டீன் உணவு.

காபி குடித்து முடித்ததும் அந்த டம்ளரை டேபிள் மீது வைக்காமல் வேண்டுமென்றே லாப்ட்டில் வைத்துவிட்டு போகும் தம்பி. பாத்திரம் விளக்கும் போது ஸ்டூல் போட்டுத்தான் எடுப்பாள். இதையெல்லாம் கேட்டால் பெரிய சண்டையாகும், “ காலா காலத்துல கல்யாணம் பண்ணி அனுப்பு.. வேலைக்கு போனாலே திமிரு ஜாஸ்த்தியாய்டும்” என்று கூறும் உறவு வட்டங்கள்.

“ எனக்கு கல்யாணமே வேணாம்பா.. நான் இப்டியே இருந்துடறேம்பா..”

“ எவனையாவது லவ் பன்றயா? அப்டி ஏதாவது இருந்தா செருப்பு பிஞ்சிடும்”

“ அப்டியெல்லாம் எதுவும் இல்ல.. ஆனா இப்ப பார்த்த மாப்பிள்ளை குள்ளம்பா”

வற்ற எடத்தையெல்லாம் தட்டிக் கழிச்சுட்டே இருக்கா.. வேற என்ன விஷயமோ என்னவோன்னு “ எதிர்வீட்டு தாமோதரன் கூட கேட்டாரு

“ அவர் அப்டித்தான் கேப்பாரு.. ஏன்னா அவங்க மிஸஸ் அவரை விட முக்கால் அடி உயரம் ..அவங்க எவ்ளோ வருத்தப் படறாங்கன்னு எனக்கு தெரியும்”

“இந்த வாய்தான் உனக்கு நல்லது எதுவுமே நடக்க விடாம செய்யுது”

இந்த மாதிரி கல்யாணம்தான் எனக்கு நடக்கபோற நல்லதா?

“ அப்பாவோட உடம்பு கன்டிஷன் தெரிஞ்சுதான் பேசறியா? உன்னாலயே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும்.. அவ்ளதான் நான் சொல்லுவேன். சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வா”

இருபது வயது கூட நிரம்பாதவன்.. டிப்ளமோ அரியர்ஸ் வைத்துவிட்டு வெட்டியாய் ஊர் சுற்றுபவன்.. வீட்டு வேலைகளை சிறிதளவு கூட பகிர்ந்து கொள்ளாதவன் – குற்ற உணர்வு ஏதுமின்றி மிரட்டுகிறான்.. அவனை விட நான்கு வயது பெரியவள்.. தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

படிப்பு - தன்னம்பிக்கையையும், பொருளாதாரம் - தைரியத்தையும் தந்துவிடும் என்பது கற்பனை. தன்னம்பிக்கையை திமிர் என்றும், தைரியத்தை அடங்க பிடாரித்தனமெனவும் பெயரிட்டு ஆவேச கூச்சல் போடும் ஆண்வர்கம் வீட்டை ஆளும் தேசமிது. அவர்களது ஆட்சியில் பெண்கள் கொத்தடிமைகள்தான்.

சொந்த பந்தங்களோ,வழியில் பார்ப்பவர்களோ, அலுவலக நண்பர்களோ - பொழுது போகாமல்.. பேச வேறு விஷயம் இல்லை என்றவுடன் “ பவிக்கு எப்போ கல்யாணம்.. .. இன்னும் பார்த்துண்டு இருக்கீங்களா? என்ற ஒரு கேள்வியை போகிற போக்கில் கேட்டுவிட்டு போய்விடுகின்றனர். ஒரே நாளில் நாலு பேராவது இப்படி கேட்கும் போது ப்ரச்சனையின் தீவிரம் அதிகரிக்கின்றது.

இந்த தொல்லைகளில் இருந்து விடுபட.. கண்ணை மூடிக்கொண்டு இந்த இடத்தையே ஏற்றுக் கொள்ளலாமா? தற்கொலை செஞ்சுக்கலாமா? தற்கொலை செஞ்சுக்க அசாத்திய தைரியம் வேணும்..

அலுவலக தோழிகள் அனைவருக்கும் நல்ல நல்ல வரன்கள் அமையும் போது எனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்க்கிறது... அப்பா, தம்பி திட்டுவதைப்போல நான் அதிர்ஷ்டம் இல்லாதவளோ.. இருந்தாலும் இந்த இடத்தை சரியென்று சொல்ல மனம் உடன்படவில்லை.

“ இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தா.. நல்ல இடமா அமையும்ப்பா?

“ எனக்கு ஒன்னும் இல்ல.. நீயும் உன் தம்பியும் போட்டுக்கற சண்டையில.. நான் நிம்மதியா இருக்க முடியல.. நான் பேசாம முதியோர் இல்லம் போய்ட போறேன் .. அப்புறம் நீங்களா பார்த்து ஏதாச்சும் பண்ணிக்குங்க”

“ஆபீஸ் ப்ரண்ட் கல்யாணத்துக்கு மொழி எழுதக் கூடாதுங்கறான்.. எதிர்த்து கேட்டா தண்ட செலவு பண்றேன்னு என்னையே திட்டறான்.. நான் திருப்பி கேட்டா சண்டை”

“ஆமா.. ஒரு மாசத்துல எத்தன கல்யாணம்..? எத்தனை தடவை ஐம்பது நூறுன்னு அழறது?

விக்கித்து நின்றாள். “ முழு சம்பளத்தையும் பே ஸ்லிப்போட தந்துடறேனேப்பா.. மொழி எழுதலைன்னா ஆபீஸ்ல கேவலமா பார்ப்பாங்கப்பா” - என சொல்ல நினைத்து, பயத்தால் சொல்லாமலே விழுங்கி விட்டாள்.

“ டேய்.. டேய் .. நில்லுடா..இந்தா.. இந்த நூரு ரூபாயை வச்சுக்கோ.. க்ரிக்கெட் ஆடிட்டு திரும்பி வர லேட்டானா.. ஆட்டோலயே வந்துரு... உன் ப்ரண்ஸ்க்கு ஏதாச்சும் வாங்கி தா.. அவங்க கையையே எதிர்பார்க்காதே” – பள்ளி நண்பர்களோடு க்ரிக்கெட் விளையாடுவதற்காக புற நகர் பகுதியிலிருந்து சென்னைக்கு கிளம்பும் மகனுக்கு,வாரத்தில் மூன்று முறையாவது இவ்வாறு பணம் தந்து அனுப்புவது பவித்ராவின் தந்தையின் தலையாய கடமையாய் இருந்தது. பவித்ராவால் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஒப்பிடலில் தனது தந்தை செய்யும் ஓரவஞ்சனை புரிந்து அழாமல் இருக்க முடியவில்லை.

------------------------------------

“ நந்தினி.. பேசாம இந்த இடத்தையே சரின்னு சொல்லிடட்டா.. இதுதான் எனக்கு விதிச்சிருக்குன்னா நான் போராடி என்ன பயன்?

“ என்னடி இது...!? ஈக்வல் ஹைட் இருந்தா கூட பரவாயில்ல.. உன்னை விடவும் ரொம்ப குள்ளம்.. சரியா வரும்னு எனக்கு தோணல”

“ எனக்கு துளி கூட பிடிக்கல நந்து..ஆனா அப்பா, தம்பி டார்ச்சர் தாங்க முடியல.. வீட்ல எப்பவும் சண்டை தான்.. வீட்டு வேலையும் செஞ்சு.. ஆபீஸ் வேலையும் செஞ்சு.. வம்பு சண்டைக்கு வந்தாலும் வாய் தொறக்காம இருந்து.. எனக்கு த்ரானி இல்ல நந்து.. தினம் தினம் நான் தூங்காம,சத்தம் போடாம தலையணைல முகம் புதைச்சு அழறது எனக்குத்தான் தெரியும்”.

“ இந்த பையனை விட.. போன தடவை வந்த இடமே பெட்டர்.. கால்தான் விந்தி.. விந்தி நடந்தான்.. நல்ல கலர்.. ஹைட் வெயிட்டா..முகம் கூட அழகா இருந்துச்சு”

“ அந்த இடமே திருப்பி கேளுங்கப்பான்னா.. அப்பாக்கு ஈகோ ப்ராப்ளம்.. அவன் கால்ல போய் விழ சொல்றியா என்னைன்னு?” கத்தறாரு

" எதிர் நீச்சல் படத்துல பாலசந்தர் ஒரு வசனம் வச்சிருப்பார்.. ஜெயந்தியோட அம்மா ஜெயந்திக்கு எப்டியாவது கல்யானம் செஞ்சு அனுப்பிடனும்னு தவிப்பாங்க.. அதுக்கு அவளோட அப்பா “ என் வீட்டுக்காரியோட தலைவலி, திருகுவலி என் பொன்னோட வாழ்க்கையை தீர்மானிக்க கூடாதுன்னு" சொல்லுவாரு.. ஆனா இங்க உங்க அப்பாவே இப்படி இருக்காரு.. கொஞ்சம் வெயிட் பண்ணா நல்ல இடமா வரும் பவி”

“ இதத்தான் நானும் சொன்னேன்.. யாரையாவது லவ் பண்றியான்னு கேக்கறாங்க ரெண்டுபேரும்.. செத்து போய்டலாம்னு தோணுது”

“ப்ச்.. உன் அழகுக்கும் பொறுமைக்கும் .. உங்க அம்மா இருக்கும் போதே நல்ல இடமா பார்த்து முடிச்சிருக்கலாம்.. நாத்தனார் இருக்க கூடாது.. மாமியார் நல்லவளா? பையன் டாக்ட்டரா இருக்கனும், இஞ்சினீயரா இருக்கனும்னு செலக்ட் பண்ணி செலக்ட் பண்ணியே உன்னை கவுத்துட்டு போய்ட்டாங்க”

" நேத்து அத்தை வந்திருந்தாங்க நந்தினி"

" என்னவாம்..?"

.. சுமதிக்கும் இடம் அமைஞ்சிடுச்சாம்.. பேசி முடிக்க அப்பாவ வந்து கூப்ட்டாங்க”

“என்னது...!? சுமதிக்கா.. ? பதினேழு வயசுதானே ஆகுது அவளுக்கு? அவ அக்காக்கே இப்பத்தானே ரெண்டு மாசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு”?

“ இதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு நந்தினி.. அப்பாக்கு திடீர்ன்னு எதாவது ஒன்னு ஆயிருச்சுன்னா..? நாங்க ரெண்டு பேர் என்ன செய்றது..? ஏதோ ஒன்னு.. என் தலையெழுத்து படி நடக்கறது நடக்கட்டும்”

தன்னைவிட சின்னவளுக்கு திருமணம் ஆகிறது என தெரியவந்தால்..மறை முகமான அந்த அதிர்ச்சியில்.. மன அழுத்தத்தில் – பவித்ரா இந்த இடத்தியே முடிக்கச் சொல்லுவாள் என எதிர்பார்த்து அவளது அத்தை விரித்த வஞ்சக பொய் வலை அது. அப்படி வலை விரிக்கச் சொன்னது அவளது அப்பாவேதான் என்பதும் கடைசி வரை பவித்ராவுக்கு தெரியாது.

.... தொடரும்..

Thursday, May 04, 2006

மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

“ உன்னை விட அவரு குள்ளம் கிடயாது... அது போதாதா..?

“ இல்லடா.. நானே கொஞ்சம் குண்டு.. அதுக்கு ஏத்த மாதிரி அவரும் கொஞ்சம் ஹைய்ட் வெயிட்டா இருந்தாத்தானே .. வெளிய தெருவ போகும் போது நல்லா இருக்கும்..?

“ இப்டி சொல்லி சொல்லியே வர்ற இடத்தையெல்லாம் தட்டி கழி. இப்பவே இருபத்தி நாலு.. என் ப்ரண்டோட அம்மால்லாம் “ ஏன் உன் அக்காக்கு இன்னும் கல்யாணம் ஆகல ஆகலன்னு தொளைச்சு எடுக்கறாங்க.. வெளிய தல காட்ட முடியல”

உண்மையில் இப்போது பவித்ராவிற்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை அவளைவிடவும் அரையடியாவது குள்ளமாக இருப்பார்.

“ பொண் பார்க்க வந்த அன்னைக்கே .. நடு ஹால் வரைக்கும் ஷூ போட்டுன்டு வந்துட்டார். அது ஷூவே கிடையாது.. சின்ன சைஸ் ஸ்டூல்.. எனக்கு ஈக்வல் ஹைட்னாலும் பரவாயில்லை.. என்னைவிட குள்ளம்ன்னா எல்லாரும் கேலி பண்ணுவாங்கப்பா..?

“ நேத்து டாக்ட்டர்ட்ட போனேன்.. அதே டேப்லட்ஸ் கன்டினியு பண்ணச் சொன்னார்.. நெய் எண்ணெய்லாம் அதிகம் சேர்த்துக்க வேண்டாம்னார்..”

அதாவது என்னோட உடல் நிலை அதே நிலைமைலதான் இருக்கு.. இதையெல்லாம் கன்சிடர் பண்ணி ஒரு முடிவுக்கு வா..ஒரு முடிவு என்ன? இந்தப் பையனையே முடிச்சுடுங்கப்பான்னு வாயை திறந்து ஒரே ஒரு வார்த்தை சொல்லிடு .. உன்னை பிடிச்சு தள்ளிடறோம் என்பதைப் போலத்தான் பெற்றெடுத்த தந்தையும் ,பின்னால் அவதரித்த தம்பியும் பேசினார்கள்.

கண்ணில் நீர் வழிய, நெஞ்சம் வலிக்க ஜன்னல் கம்பிகளின் வழி வெளியே பார்த்தாள் பவித்ர. கண்ணுக்கெட்டிய தூரம் வரை காலி மனைகள்..அதில் இரை தேடும் சிறு பறவைகள் தங்கள் மனதுக்குப் பிடித்த இணைகளோடு .. அவற்றிற்கு இருக்கும் சுதந்திரம் கூட தனக்கில்லை என நினைக்க நினைக்க மௌனமாய் அழுகை வந்தது.

அவள் அழுதததை கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவேயில்லை தனயனும் தகப்பனும்.

தொடரும்...

Sunday, April 30, 2006

நூல்.. நூலே நீ...!!!!

உரத்த உரையாடல் நமக்குள்
ஆழ் நிலை மௌனம் வெளியில்

எப்போதும் நீயே பேச
தவறாது நானே கேட்க
மீற இயலாத ஒப்பந்தம்- நமக்குள்

காதலை கற்பிக்கிறாய்
காமத்தையும்தான்

அழுதும் தீராத
ஆழ்மன சோகத்தை
அத்யாயமாக்குகிறாய்

சோகப் புதைகுழியில்
சோர்விக்கிறாய்

என் கோபம், தாபம்
நகைத்தல், கதைத்தல்
எல்லாம் உன்னோடு

விரல்கள் உன்னை தழுவ
கண்கள் உன்னை வருட - என்
நினைவு முழுதும் நீ

உன்னுடனான என் தனிமை
எனக்கென்றும் இனிமை

ஒவ்வொரு தனிமையிலும்
உன்னைப்போல்
இன்னொரு நண்பன்

கோபிக்காதே...
உன்னில்தானே எழுதப்பட்டிருந்தது

ஒவ்வொரு நல்ல நூலும்
ஒரு நல்ல நண்பனென்று.

Thursday, March 30, 2006

பௌர்ணமி பால் நிலா மற்றும் சித்தப்பா

“ என்னமோ போடா... நீ பேசும் போதுதான் நம்ம ஸ்கூல் டேஸ் எல்லாம் ஒன் பை ஒன்னா ஞாபகம் வருது... அதெல்லாம் ஒரு பொற்காலம்.. “ - என்றார் என் அப்பா நெக்குருகிய குரலில்.

அது என்ன அது..? எல்லோருக்குமே எப்போதும் நிகழ் காலத்தைவிட கடந்தகாலம் பொற்காலமா தோணுது. ரெண்டு வருஷம் முன்னாடி எவ்ளோ நல்லா இருந்தோம்னு ஒவ்வொரு வருஷமும் சொல்லிப்போம்.. சரி விடுங்க.. வாழ்க்கைன்னா இதெல்லாம் சகஜமப்பா.

மிக நீண்ட ப்ளாஷ்பேக் . . அதுவும் அவர்களுடைய பாடாவதி பள்ளிப் பருவத்தைப் பற்றி பேசி பேசியே.. ( நடு நடுவே எம். ஜி. ஆர் பாட்டு வேற) நள்ளிரவு பன்னிரன்டை கடத்திய அப்பாவும் சித்தப்பாவும் தூங்கலாமென ஒருமனதாக தீர்மானிந்தனர். அதன் முதற்கட்ட நடவடிக்கையாக

“பவுனு தண்ணி கொண்டா.. குடிச்சுட்டு தூங்கப் போகனும்” என்றார் சித்தப்பா.

அடுத்த நிமிடமே மெட்டி ஒலி சிணுங்கலோடு, வளையோசை கொஞ்ச , பளிச்சென்று துலக்கிய சில்வர் செம்பில் தளும்ப தளும்ப தண்ணீரை புன்னகையோடு எங்கள் அழகிய சித்தி தந்திருப்பார்கள் என நீங்கள் நினைத்தால்...மன்னிக்கவும் .. அவ்வாறு எதுவும் நிகழவில்லை. அம்மாவும் சித்தியும் உள்ளறையில் போய் தூங்கி ரென்டு மணி நேரம் ஆகி விட்டது. அப்படியே அவர்கள் விழித்திருந்தாலும் வித்யாசமாய் ஏதும் நிகழ்ந்துவிடாது.

சித்தியை தண்ணீர் கொண்டு வரும்படி கட்டளை இட்டது சித்தப்பாவே எதிர்பாராத ஓர் அனிச்சை செயல்தான்.. பேச்சு ஸ்வாரஸ்யத்தில் யாரிடம் என்ன ஆணையிடுவதென்பதை மறந்தே போய் விட்டார். பாதுகாப்பிற்காக அண்ணனும் அண்ணனின் மக்கள் நாங்களிருவரும் இருக்கும் தைரியத்தில்தான் அவர் இவ்வாறெல்லாம் துணிந்து பேசி விட்டார். ஊருக்கு போனதும் இந்த கணக்கு சுமூகமாகவோ அல்லது அசுமூகமாகவோ தீர்க்கப்படலாம்.

நானும் எனது தம்பியும் இச் சகோதரர்களின் ப்ளாஷ்பேக் அரட்டயை சிரித்து ரசித்தோம் ... வாஸ்தவம் தான்.. அதுக்காக கழுத்து வரை இழுத்து போர்த்திய கம்பளியை விலக்கி, படுக்கையின் முழு செட்டப்பையும் கலைத்து .. எழுந்து போயி தண்ணீரெல்லாம் கொண்டு வந்து தரும் அளவுக்கு நாங்கள் அவரது பின்புல நினைவுகூறல்களால் சிலாகித்துவிட்டோம் என கூற முடியாது. எனவே உடனடியாக உறங்கி விட்டதை போல நடித்தோம். தம்பி வழக்கம் போல ஓவர் ஆக்ட் செய்தான்.

“ டேய் .. இப்ப யாராவது தண்ணி கொண்டு வந்து தரப்போறீங்களா இல்லயா..?

போனால் போகட்டுமென்று தண்ணீர் கொண்டு வந்து தந்துவிட்டு.. “ சரி.. சித்தப்பா நீங்க அந்த வயர் கட்டில்ல படுத்துக்குங்க.. கொஞ்சம் தான் கிழிஞ்சிருக்கு.. உங்க வெயிட்டுக்கு இன்னிக்கி ராப்பொழுது தாங்கும்” - என்றேன். இங்கே சித்தப்பாவின் தோற்றத்தைப் பற்றி விவரிப்பது தவிர்க்க இயலாததாகி விட்டது. குடும்பத்தின் கடைகோட்டி.. பாட்டியின் செல்லம்..எனவெ நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் கொண்டாலும்.. அவர்+அவரது உடைகள்+அவர் புகைக்கும் சிகரெட்+ வத்திப்பெட்டியோடு சேர்த்து மொத்தம் ஒரு நாற்பது கிலோ இருக்கலாம், சமய சந்தர்ப்பங்களில் இதை விட குறையலாம்.

சித்தப்பாவை பார்த்து பார்த்திபன் கவிதை எழுதினால்.. பின் வருமாரு சொல்வார்

“ஒரு வெள்ளை சிகரெட்
( கூமுட்டை.. சிகரெட் விள்ளையாத்தான் இருக்கும் முண்டம்)
இன்னொரு
வெள்ளை சிகரெட்டை பிடிக்கிறதே..
கமா.. ஆச்சர்ய குறி..!

“ எது..? இங்கயா.. இந்த எட்டடி குச்சுலயா? நெவெர் ( நோட் பண்ணிக்குங்க.. அந்தக்கால பி.யூ.சி அதனாலத்தான் இந்த நெவெர் எல்லாம் ) வீட்டுக்குள்ளே மனுஷன் படுப்பானா இந்த மெட்ராஸ்ல ?

“ அதுக்கு...?

“ நான் மேலபோயி படுத்துக்கறேன்”

“ என்னது...?மொட்ட மாடிலயா..? சித்தப்பா ரிஸ்க் எடுக்காதீங்க..ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா..? இப்பத்தான் பாட்டிய பறி கொடுத்துட்டு பறி தவிச்சு நிக்கறோம் நாங்க”

“அங்க கிராமத்துல சிலு சிலுன்னு காத்துல வயகாட்டுல தூங்கி பழக்கப்பட்டவன் நான்... சீறும் சிங்கத்தை சிறு நரி கூண்டில் அடைக்காதீங்க” என்றார் அடுத்த அறையில் சித்தி தூக்கம் கலையவில்லை என்பதை உறுதி செய்தபடி.

எத்தனை கருத்தம்மா வந்தாலும் .. கிராமம் என்றாலே சிலு சிலு காத்து, ஆறு கரை, மழை மடுவு, பச்சை கலர் என்னும் மாயையை யார் மனதிலிருந்தும் அகற்றவே இயலாது என்பதில் எனக்கு வருத்தம்தான்.

தொன்னூறு வயது பாட்டி இறந்து இன்னும் முழுசா மூனு நாள் கூட முடியல.. அவர் பெற்றெடுத்த இந்த பாசப் பறவைகளின் பாடாவதி ப்ளாஷ்பேக்,பாட்டு கச்சேரி அரட்டையை கூட மன்னித்து மறந்தோம்.. ஆனா இப்டி..தன்னந்தனியா .. ஒத்தை ஆளா ..மொட்டை மாடிலதான் படுப்பேன்னு அடம் பிடிக்கறது ரொம்ப ஓவர். தண்மையாக சொல்லிப் பார்க்கலாம் என எழுந்தான் தம்பி.

“ சித்தப்பா வேணாம்.. சாயந்திரம் கடைக்கு போயிட்டு வரும் போது..மழைகாலம் கூட இல்ல.. இப்ப போய் தும்பி பறக்குதுன்னு சொன்னீங்க.. அப்பவே அது தும்பி இல்ல..கொசுன்னு நான் சொல்லி இருக்கனும்.. நீங்க வந்து தங்கப் போறது ஒரு ரெண்டு நாளு..ஏற்கெனவே சித்தி வேற கூட இருக்காங்க.. உங்கள இன்னும் பயமுறுத்த வேணாமேன்னு நெனைச்சேன்.. சொல்றத கேளுங்க..இங்க ஹால்லயே படுங்க"

“டேய்..ஒரு பெட்ஷீட்டும்..ஒரு கொசு வர்த்தியும் தாங்கடா.. ஜம்முன்னு நிலாவ பார்துகிட்டே தூங்கி ப்ரெஷ்ஷா வரேன்"

" பாட்டியோட ஆவி வரப் போகுது.. நீங்க செல்ல பிள்ளை வேற"

"எங்கம்மாதானேடா வந்தா வந்துட்டு போகட்டும்"

“ அவ்வளவா..? சித்திகிட்ட பர்மிஷன் வாங்கினீங்களா? வேணாம் சித்தப்பா..இதெல்லாம் ஆவறதில்ல..ரிஸ்க் மேல ரிஸ்க் எடுக்கறீங்க.. உங்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர்ரது எங்க கடமை" - என்றேன் நான்

" விடும்மா.. அவன் அந்த பெரிய ரெண்டு கட்டு வீட்லயே மொட்ட மாடிலதான் தூங்குவான்.. நீ போடா ராமு- என்றார் அப்பா.

"அப்பா.. உங்க காலத்துல இருந்த கொசு பூச்சி இனத்தை சேர்ந்தது..இந்த காலத்துல பறவை இனமா மாறிடுச்சுப்பா.. சித்தப்பாவை சுருளா சுருட்டி பின்னாடி சவுக்குதோப்புக்கு தூக்கிட்டு போய் ரத்தத்தை உறிஞ்சி துப்பப் போகுது "

சென்னையில் சவுக்குத்தோப்பா...?ன்னு பதறி அடிச்சு எழுந்துக்காதீங்க.. சென்னையின் புற புற அதையும் தாண்டிய புற நகர்ப் பகுதிகளில் சவுக்குத்தோப்பு இருப்பது ஜீரணிக்க இயலாத உண்மைதான்.

நாங்கள் இவ்வளவு பண்பட்ட மொழிகளில் எடுத்து சொல்லியும்.. தன் முயற்சியிலிருந்து மனம் தளராத வேதாளம் போல..( விக்ரமாதித்தன் தானே இந்த வாக்கியத்துக்கு பொருந்தும்னு நீங்க நினைக்கலாம்.. ஆனா.. எங்க சித்தப்பாவுக்கு பொருத்தமா எதை கம்பேர் பண்ணனுங்கற உரிமை கதாசிரியையாகிய எனக்குத்தான் இருக்கனும் ..ஓகே?)

பழைய முழு கை ஸ்வெட்டெர், கம்பளி, பாய் தலகாணி, ஒரு சொம்பு, அதுக்குள்ள கொஞ்சம் தண்ணி, ஒரு கொசு வர்த்தி சுருள், ஒரு சீட்டா பைட் வத்திப்பெட்டி,ஒரு டார்ச் லைட் (ஆத்திர அவசரத்துக்கு எரியவே எரியாது) எடுத்துக்கொன்டு நள்ளிரவு ஒன்னரை மணிக்கு பால் நிலவொளியில் பள்ளிகொள்ளச் சென்றார்.

இவ்ளோ ஓவர் கெட்டப்புக்கு அவர் நிலாவுக்கே போயிருக்கலாம்.

மேற் சொன்ன உபகரணங்களை ரெண்டு நடையா ஏறி இறங்கி வந்து அவரே எடுத்துட்டு போனாரே ஒழிய நானோ, என் தம்பியோ, அவரது அண்ணானோ எடுத்துச் சென்று தந்து அவரை உபசரிக்கவில்லை. தொன்னூறு வயதானாலும்.. பாட்டியே ஆனாலும்.. ஆவி ஆவிதானுங்களே?

சித்தப்பாவின் இந்த அராஜக அத்துமீறல்களை, அடங்காபிடாரிதனத்தை, அவரது எதிர்கால நல்வாழ்வை கருத்தில் கொண்டு, சித்தியிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டாமென நாங்கள் மூவரும் அமைதி தீர்மானம் நிறைவேற்றினோம்.


ஏற்கெனவே எங்கள் ஊரில் ஒன்னு மண்ணா பழகி தூக்கு மாட்டி செத்தவங்க ஆவி, அவுட் ஸிட்டி பேய், பிசாசு, ரத்த காட்டேரி, கொள்ளிவாய் கருப்பு, முனீஸ்வரன் நடமாட்டம், நல்ல பாம்பு படமாட்டம் என பின்னிரவு தொடங்கி நள்ளிரவு வரை சித்தப்பா சொன்ன கதைகளால் நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலியே நகருவதைப்போல உணர்ந்துக் கொண்டிருக்கையில், படுக்கையில் கண்களை திறந்து சிரித்தபடியே உயிர் விட்ட பாட்டியின் முகம் வேறு அடிக்கடி நினைவுக்கு வந்தது. சித்தியின் மாங்கல்ய பாக்கியம் அவரை காப்பாற்ற வேண்டுமென வேண்டுவதை தவிர வேறொன்றறியோம் பராபரமே.

அப்பா மேற்கொண்டு அவரது தனிப்பட்ட ப்ளாஷ் பேக்கை துவங்க விடாமல் தடுத்து” தூங்குங்கப்பா.. ப்ளீஸ்” என்றோம். நாங்களும் தூங்க ஆரம்பித்தோம்.

“ வாடி ..என் மவளே.. நான் அங்கிட்டும் இங்கிட்டும் அலையறேன்.. நிம்மதியா தூங்கறியா நீயி”

"ஐயோ.. பாட்டீ ..என்ன விட்டுறு.. உனக்கு பிடிச்ச புளி கொழம்பு செஞ்சு படைக்கறேன்.. பாட்டீ..ஈ ஈஈ"

அப்பாவும் தம்பியும் உலுக்கி எழுப்பி தண்ணீர் குடிக்க வைத்தார்கள்.. நல்லவேளை கனவுதானா?குப்புற படுத்து கம்பளியை தலைமுழுதும் இழுத்து போர்த்திக்கொண்டால் ஆவிகளிடமிருந்து தப்பிக்கலாம் என்று ஒரு சீன அறிஞர் சொன்ன அறிவுரையை நினைவுகூர்ந்து ஒரு இஞ்ச் கேப் விடாமல் இழுத்து போர்த்திக் கொண்டேன்.

பத்து நிமிடங்கள் மெல்லக் கழிந்தது..தூரத்தில் நாய் குரைத்திருக்கலாம், சுவர் கோழி க்ரீச்சிட்டிருக்கலாம்.. தவளை கத்தியிருக்கலாம்.. இதெல்லாம் எங்களுக்கு கேக்கவே இல்லை. எல்லா கதவு ஜன்னல இழுத்து மூடிட்டா எப்டிங்க இதெல்லாம் கேக்கும்..? அமைதியின் மடியில் ஆழ் நித்திரை கொள்ள துவங்கையில்

டொக்..டொக்..

சீ..ப்ரம்மை

டொக்.. டொக்..

இதுவும் ப்ரம்மைதான்

டொக்..டொக்.. டொக்..

அப்பா, தம்பி, நான் மூவரும் எழுந்து உட்கார்ந்து விட்டோம்

"பாட்டிதான்பா கதவ தட்டுது"

ஆவிக்கு கதவு ஏது.. ஜன்னல் ஏது.. நேரா உள்ள வந்துரும் - என்றார் அப்பா

"அப்பா .. என்னப்பா இது.. இப்ப போய் இப்டி சொல்றீங்க"

டொக்..டொக்..

ஒரு வேளை.. பாட்டி இறந்ததுக்கு வர முடியாத நம்ம ஊர்காரங்க..அந்தி சந்தியில புறப்பட்டு இப்ப வந்து சேர்ராங்களோ? எங்க ஊர் காரங்களே அலாதிதான்..முழு சுதந்திரம் எதிலயும்.. எப்பவும்

யாரது..? - தைரியமா இந்த கேள்வியை கதவை பார்த்து கேட்டே கேட்டுட்டான் என் தம்பி.

பதிலில்லை.

மனப் ப்ராந்திதான்..பேசாம விபூதி வெச்சுகிட்டு தூங்கலாம்- என்றார் அப்பா.

விபூதி டப்பா ஜன்னலோரமாக இருப்பதால் அதை எடுப்பதில்லை என்பதில் முழு தீர்மானத்தோடு இருந்தோம் நாங்கள் மூவரும்.

எதுக்கும் வாச கதவ திறந்து பார்த்துடலாமா? என்றேன்

எதுக்கு ரத்தம் கக்கி சாவவா?- முறைத்தான் தம்பி. விட்டால் அறைந்துவிடுவான் போலிருந்தது.

பேயை விடுங்க.. திருடனா இருந்தா..? - எதிர் கேள்வி கேட்டார் அப்பா. எங்களது பதட்டத்தை ரசித்து நமட்டு சிரிப்பு சிரிக்கிற மாதிரியும் தோன்றியது.

டொக்.. டொக்..டொக்.. டொக்.. டொக்.. டொக்..

இதற்குமேலும் தாள் திறவாமலிருந்தால் ஊரிலிருந்து வந்திருப்பவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடுமென.. அனைத்து விளக்குகளையும் எரிய விட்டு.. வெளிவாசல் லைட்டையும் போட்டு

“ இதுக்குத்தான்.. மெயின் டோர்க்கு முன்னாடி கிரில் கேட் போடனும்னு சொன்னேன்.. இப்ப பாருங்க கதவ திறந்ததும் திருடன் தள்ளிக்கிட்டு உள்ள நுழையப் போறான். இந்த ஒட்டட குச்சி தான் இருக்கு.. எதுக்கும் நீ இதை கையில வச்சிகிட்டே கதவ திறடா.. - என்றேன்

“ எது... நான் கதவ திறக்கனுமா? இதோடா.. போவியா - என்றான்.

அப்பாவின் தைரியம் உலகப் ப்ரசித்தி.. சொந்தக்காரர்களாகத்தான் இருக்கும் என துணிந்து அசால்ட்டாக கதவை திறந்த அவர் உறைந்து போய் நின்றார்.. . என் கண்களையே நம்ப முடியவில்லை... அங்கே.. அங்கே..

யாருமே நிற்கவில்லை.

அப்பாவும் பயந்து விட்டார் என்பது அவரது கைகால்களின் நடுக்கத்திலிருந்து நான் கண்டு பிடித்தேன்.அப்பாவை பாது காக்க வேண்டியது எங்கள் கடமையாச்சே. எனவே

“ அப்பா... பேசாம .. அப்டியே டக்குன்னு உள்ள வந்துட்டு.. டக்குன்னு கதவ மூடிடுங்க.. டக்குன்னு உள்ள வாங்கப்பா.. ம்.. சீக்கிரம்".( "டக்குன்னு" என்ற வார்த்தையை மொத்தம் மூன்று முறை உபயோகித்திருந்தேன்)

டக்குன்னு உள்ள வந்த அப்பா டக்குன்னு கதவை மூடி, மேல் கீழ், மற்றும் நடு, சைட் தாழ்பாள்களை போட்டுவிட்டு..மேற்கொண்டு போட தாழ்ப்பாள்கள் ஏதும் இல்லாத பட்சத்தில்... சரோஜா தேவி மூடிய கதவுமேல் முதுகு சாய்த்து மூச்சு வாங்கி எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பதைப் போல ஓவர் எக்ஸ்ப்ரெஷன் கொடுத்தார்.

என்னப்பா இது..?!!!!! பாட்டி நல்லவங்கதானே... நம்மள இப்டி சோதிக்கறாங்க..?

அப்பா ஏதும் பேச முடியாமல் நாக்கு மேலண்ணத்தில் இருந்தது. பயத்திலிருக்கும் போது பதில்கள் வருவதில்லைதான்.

ஆனால் அந்த அமானுஷ்ய சத்தம் மட்டும் மீண்டும் வந்தது

டொக்.. டொக்..

( கவனிக்கவும்: நள்ளிரவு, ஆவி, அமானுஷ்ய சத்தம், டொக்.. டொக், தூரத்தில் நாய் குறைத்தது - அப்டீன்னு பேய் கதைக்கு வேண்டிய எல்லா வார்த்தைகளையும் போட்டு கதை எழுதி இருக்கேன்)

பேசாம அம்மா, சித்தியை எழுப்பிடலாம்ப்பா.. தைரியமா இருக்கறவங்க அட்லீஸ்ட் ரெண்டு பேராவது கூட இருக்கனும் - என்றேன் நான்.

சைகையாலேயே ஒப்புதல் அளித்தார் அப்பா. அம்மாவும் சித்தியும் எழுந்து விலாவாரியாக நாங்கள் விவரித்ததை கேட்டுக் கொண்டிருக்கும் போதே...

ரத்தத்தை உறைய வைக்கும்.. டொக்.. டொக்...

அவர்களும் ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்கள். அமைதி காக்கும்படி சித்தி சைகை செய்தார்கள்.

மீன்டும்.. அதே..மன்னிக்கவும்.. வேறு..டொக்..டொக்..

சித்தி நேராக அந்த ஹாலின் மறு மூலையிலிருந்த மாடிப்படி கதவை நோக்கிச் சென்றார்கள். நின்றார்கள். நாங்களும் அவர் பின்னாடியே சென்றோம்.. நின்றோம்..

அங்கேயும்டொக்.. டொக்.. டொக்

" பார்த்தீங்களா இங்கயும் அதே சத்தம்.. ப்ரம்மை"

"உங்க சித்தப்பா எங்கடி? என்றார்கள் சித்தி

"மேல தூங்கறாரு"

பேசாமல் கதவை திறந்தார்கள்.. அங்கே... அங்கே..அங்கே நின்று கொண்டிருந்தது.....

வேற யாரு...

சித்தப்பாவே தான்.

வள்ளலார் போல வெள்ளை வேஷ்டியை தலைக்கு முக்காடிட்டு, ஸ்வெட்டர், பாய் தலகாணி, எவர் சில்வர் சொம்பு, மஸ்கிட்டோ காயில், வத்திப் பெட்டி.. இன்னும் பல பொருட்கள் கைகளில் இருக்க.. வாயில் டார்ச் லைட்டை கவ்வி பிடித்தபடி நின்றிருந்தார். அவர் வாயிலிருந்த டார்ச் லைட்டை சித்தி பிடுங்கியதும்

“ கொசு கொஞ்சம் ஜாஸ்திதான் “ என்றார்.

திருமணத்திற்குப் பிறகு அவரை அடித்து பின்னி தொலைத்துக் கட்டும் முழு உரிமை சித்திக்கு மட்டுமே ஆர்ஜிதம் செய்யப்பட்டதால்.. ஏதும் செய்ய இயலாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றோம் நாங்கள் மூவரும்.