Friday, April 06, 2012

ஒரு நாள் ஒரு கனவு


இறைவனுக்கும் நமக்கும் பல கோடி யுகங்கள் தூரம் இருக்கலாம் ஆனால் நாம் அவரை நோக்கி ஒரு அடி  எடுத்துவைத்தால்  அடுத்த அடியில் அவர் நிக்கிறார் என்பதை உணர்ந்த  சில தருணங்கள்
ஒரு நாள் ஒரு கனவு. கனவில்  மெல்லிய இள ரோஜா நிறமும் இள மஞ்சளும் கலந்த அழகிய கல்லினால் ஆன ஒரு பெரிய பிரகாரம். அவ்விரு நிறங்களும் அந்த பிரகாரத்திற்கு ஒரு மென்மைத் தன்மையை அளிக்கின்றன.   உயரமான கருவறை சுவற்றை சுற்றிவரும் அந்தக் கற் பிரகாரத்தில்  மிக சிறியவளாக நான் நடந்து செல்கிறேன்.  நடக்கும் போதே அதன் அழகையும், குளுமையையும், தூய்மையையும் வியக்கிறேன்.  அதன் பிரம்மாண்டத்தின் முன் நான் ஏதுமற்றவள் என்பது தெளிவாக புரிகிறது. திடிரென நான் வியந்து நிற்கின்றேன்  ..  ஆம் எனக்கு பிடித்த பால கணபதியின்  நின்ற கோலத்தில் உள்ள ஒரு சிற்பம் அந்த பிரம்மாண்டமான கருவறை சுவற்றில் ஒரு வளைவு மாடத்தில்  செதுக்கப்பட்டு நிற்கக் கண்டேன். கனவிலேயே கண்களில் நீர் வழிய வழிய   அவரை வணங்க அருகில் செல்கிறேன்.  அங்கே "எண்ணெய் முலமாக என்னை வழிபடு"என்று தெளிவாக தமிழில் எழுதப்பட்ட ஒரு அறிவிப்பு இருந்தது
. 
 கனவும் கலைந்தது.

       மிகவும் சுறு சுறுப்பாக ஒரு அரை கிலோ  இதயம் நல்லெண்ணெய் பாக்கெட் ஒரு நாலு முறை  பக்கத்திலுள்ள விநாயகர் கோயிலுக்கு வாங்கி தந்திருப்பேன்.  அதன் பிறகு மறந்து போனேன். அவசரமாக ஆகவேண்டிய வேலை அப்போதைக்கு ஒன்றும் இல்லை   எனவே   அவ்வளவு தான் எனது  பக்தி ..
  
10-வது 12-வது  வருடத் தேர்வுகளின் போது "ஒரு ரெண்டவர் பிள்ளையாரை தர முடியுமா.. எக்ஸாம்  டேபிள்ள  பக்கத்துல வச்சி எழுதிட்டு, திருப்பி உங்ககிட்டயே தந்திடறேன்”  என்று அர்ச்சகரை கேட்க நினைத்ததுண்டு.  எங்கள் தெரு முனை - தெருகுத்து  குட்டி பிள்ளையார் அப்பொழுதே எவர்சில்வர் உண்டியல், பூட்டு (செயினோட) தினமும் சந்தன காப்பு, ஜரிகை அலங்காரம்னு குட்டி குட்டி தேங்கா மாலையெல்லாம் போட்டுக்கிட்டு குழந்தைகள் பிரெண்ட்லியா  இருப்பார். ஆட்டோ ஸ்டாண்ட் அங்கே வந்ததும், அவர் கோயில் கொண்டுள்ள காம்பவுண்ட்  சுவர் முன்னாடி  5 அடி அகலத்திற்கு டைல்ஸ் ப்ளோர் , கிரில் கேட் ,  மல்டி கலர் சன்  ஷேட், அட்டகாசமான விநாயக சதுர்த்தின்னு எப்பவும் சிரிச்சமுகமா இருப்பார்இப்பவும் பரிட்சைன்னா  ஒரே ரகளைதான்.

முக்கியமாக ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்- நான் - பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில். தெற்கு  பக்கம் வேலுரை தாண்டி சென்றதில்லை  வடக்குப் பக்கம் விசாக பட்டினம் வரை போயிருக்கிறேன்.  மேற் சொன்ன கனவைக் கண்டு, சரியாக 6 மாதம் கழித்து, எனது  அலுவலக தோழியின் வற்புறுத்தலுக்கு இணங்க அவர்களது சொந்த ஊருக்கு விடுமுறைக்கு போக  நேர்ந்தது.

பூக்களை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்த நான் .. அந்தக்  கோவிலின் நுழைவு வாயிலின் பிரம்மாண்டத்தைப் பார்த்தே விக்கித்து நின்றேன்..   கோயிலின் பிரம்மாண்டமும், விஸ்தாரமும் என்னை நடக்கவே விடவில்லை. கடவுளே இந்த கோவிலை தரிசிக்கும் பாக்கியத்தை எனக்கு தந்தாயே  என  கண்களில் கண்ணீர். 

லூசா நீ எதுக்கு இப்ப அழற? "- என் தம்பி பக்கத்தில் இருந்திருந்தால் இப்படித்தான் கேட்டிருப்பான்.

ஆம்  நான் சென்றது தஞ்சை   பிரகதிஸ்வரர்  (பெரிய) கோவில். 

நான் தமிழச்சியாக பிறந்ததில்  அப்போதுதான் மிகப் பெருமை அடைந்தேன்.  என் முதாதையர்கள் இவ்வளவு புத்திசாலிகளா? இவ்வளவு பெரிய கோவிலை எப்படி கட்டினார்கள்? அதுவும் மலைகளே இல்லாத மணற்பாங்கான இந்த தஞ்சாவூரில்? கடுகளவு கூட நீ சாதிக்கவில்லை உனக்கு பல யுகங்களுக்கு முன்பே மலையளவு சாதித்து விட்டு போய் இருக்கிறார்கள் என  உள்ளிருக்கும் குரல் சொன்னது.

அவ்வளவு பெரிய ஆவுடையாரையும், அழகே உருவான அம்பிகையையும் பெரிய நந்தியையும் பார்த்து பார்த்து ரசித்தபின் .. வேண்டிக்கொள்ள ஏதுமில்லை .. அம்மையப்பா  நீயே பார்த்து ஏதாவது செய்..  உன்னை மீண்டும் மீண்டும்  தரிசிக்கும் பாக்கியத்தை தா என்ற வேண்டுதலை தவிர நெஞ்சுக்குள் ஏதுமில்லை.

ஆனால் – “ இன்னும் ஒரு அதிசயம் உனக்காக தனியே வைத்திருக்கிறேன் வா.. என்று என் சிவனார் என்னிடம்  சொல்வது போல் இருந்தது.   

ஆவுடையார் கருவறைப் பிரகாரம் சுற்றி வரும் போது வலது புறம் சிற்பங்களை பார்த்துக் கொண்டே வந்த நான்  மெய் சிலிர்த்து நின்றேன்.. வியப்பில் என் கண்கள் விரிந்தன . என் மேல் இத்தனை கருணையா என நெகிழ்ந்து நின்றேன்..  ஆம் அவரேதான் - என் கனவில் 6 மாதங்களுக்கு முன் தோன்றிய அந்த பால கணபதி சிற்பத்தை பார்த்துத்தான்  நான் வியந்து      விக்கித்து நின்று  கொண்டிருந்தேன்.

பேசுவதற்கோ, பகிர்ந்துக் கொள்ளவோ ஏதுமில்லை என்னிடம்.

           
தஞ்சை பெரிய கோயிலுக்கு நான் சென்றது என் வாழ்வில் அதுவே முதல் முறை.. ஆனால் நேரில் தரிசிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வந்த கனவில் பிரகார கற்களின் நிறம்  கூட மாறாமல் அச்சு அசலாக, அந்த சிற்ப செதுக்கல்கள், அணி மணிகள் கொஞ்சமும் மாறாமல்  அவரை முழுவதுமாக  மிக அருகில் நான்  கண்டேன், ஒரே ஒரு வித்யாசம் எண்ணெய்  முலமாக என்னை வழிபடு என்ற அறிவிப்பு பலகை நிஜத்தில் வைக்கப்பட்டிருக்கவில்லை.

இப்போதும் நான் உணர்ந்த தெய்வதம் என்னால் உங்களுக்கு ணர்த்தப்பட்டதா என எனக்கு புரியவில்லை.

4 comments:

அருள் குமார் said...

பாலகுமாரனின் வாசகியாயிற்றே நீங்கள். உடையார் படிக்கவில்லையா? படித்திருந்தால் எப்போதோ தஞ்சை பெரிய கோயிலை பார்த்திருப்பீர்கள்.

பத்ம ப்ரியா said...

நன்றி அருள் ..
உடையார் 6 பாகங்களும் வாங்கி வைத்திருக்கிறேன். முதல் இரண்டு மட்டும் படித்துமுடித்தேன் . சமிபத்தில் கபாலி கோவில் அருகே உள்ள பூஜை பொருட்கள் விற்கும் ஒரு கடையில் அவரை பார்க்க நேர்ந்தது. " இந்த காயத்ரி படத்தை வாங்கிக்கோ ..நல்லா அம்சமா அழகா இருக்கு " என ஒரு தஞ்சாவூர் ஆர்ட் பிரேமை கையில் வைத்து அவரது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தார். “” போ... போய் பேசு.. இப்ப வாங்கின அவரோட புக்லையே ஆட்டோகிராப் வாங்கு “- என என் தோழி சொல்லும் போது கூட எதுவுமே செய்யவில்லை நான் . எங்களது பரபரப்பை கவனித்து அவரது பார்வை ஒரு கணம் எங்கள் மேல் படிந்தாலும் ஒரு ஹெட் மாஸ்டரை பார்ப்பது போலத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அவரைப்பற்றிய ஒரு வலைப்பூவில் உடையார் கடைசி அத்யாயம் எப்படி எழுதினார் என்பதை அவரே சொல்லியிருந்தார் - “ மெல்லிய பனி சூழ்ந்த அதிகாலையில் சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற அந்த அம்பாசிடர் காரில் பின் இருக்கையில் அமர்ந்து நான் கடைசி அத்யாயத்தின் கடைசி வரிகளை சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.. என் குரல் டேப் ரெகார்டர் ல் பதிவாகிக்கொண்டிருக்கிறது.. என்னுடன் சேர்த்து மொத்தம் 5 பேர் அந்தக் காரில் பயணித்துக் கொண்டிருந்தோம் .. உடையார் இறுதி பாகம் நிறைவடைந்தது என சொல்லி முடிக்கின்றேன்.. அடுத்த நிமிடம் என்னை கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல் நான் தேம்பித் தேம்பி அழுகின்றேன் .. அதே நேரம் எங்களது கார் சரியாக தஞ்சையின் எல்லைக்குள் நுழைகிறது .. நான் ஏன் அவ்வாறு கட்டுப்படுத்த இயலாதவாறு அழுதேன் என எனக்கு இன்றும் புரியவில்லை எனக்கும் இந்த தஞ்சைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்குமென திடமாக நம்புகின்றேன் என சொல்லி இருந்தார் .
என்னுடைய பதின்ம வயதில் அவரது எழுத்துக்களால் பிரம்மித்து அவரை நேரில் பார்த்தால் " உங்களது கதைகளில் வரும் பெற்ற மகளிடமே வாடகை வாங்கும் தாயையும், பேரனுக்கு ஒரு கரண்டி பீன்ஸ் கறி தர யோசிக்கும் பாட்டியையும் வாழ்க்கையில் சந்திக்கின்றேன்..ஆனால் நல்லவர்களை இதுவரை சந்தித்ததே இல்லையே " என சொல்ல விரும்பினேன்.. ஆனால் சொல்லவே இல்லை.

அருள் குமார் said...

எதனாலோ என்னாலும் அவரைச் சந்திக்கவே முடியவில்லை. மந்தைவெளியில் பல ஆண்டுகள் தங்கியிருந்த போது அடிக்கடி கபாலீஸ்வரர் கோயிலுக்கு செல்வேன்(எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாத போதும்!). உங்களைப்போல சில சமயம் அவரைப் பார்த்தும் ஏதோ தயக்காத்தால் பேசாமல் விலகிப்போயிருக்கிறேன். இத்தனைக்கும் அவரின் வாசகர்களை மிக மதித்து பேசக்கூடியவர் அவர் எனத்தெரியும். "நான் உங்கள் தீவிர வாசகன்..." என்பதை அந்த "தீவிர"த்தின் ஆழம் அவருக்கு புரிந்திருக்குமா என்கிற தவிப்போடு கேட்பதைத் தவிர வேறென்ன பேசிவிடப்போகிறோம் என்றும், அவரின் படைப்புகளின் மூலம் சொல்லிவிடாத எதை எனக்கு இப்போது அவர் சொல்லிவிடப்போகிறார் என்றும் தோன்றுவதாலேயே அவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் விலகிவிடுவேன்.

இப்போதெல்லாம் அதே தீவிரத்துடன் அவரைப் படிக்க முடியாவிட்டாலும், பதின்மங்களில் என்னை எனக்கு புரியவைத்து என்னில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவை அவரின் எழுத்துகள் என்பதை மறுக்கமுடியாது.

ஆனாலும், இன்றைக்கும் லஸ் பிள்ளையார் கோயில் பார்த்தால் அவரின் எதிர்ப்பக்கம் குறுநாவல் மனதில் நாடகமாய் விரிவதை தவிர்க்க முடியவில்லை!

பத்ம ப்ரியா said...

அருள் ..அடுத்த முறை பார்க்கும் போது தவறாமல் அவரிடம் அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள். அவரைப்பார்ப்பதற்காகவே தென் தமிழகத்திலிருந்து ட்ரெயினில் வருபவர்கள் எல்லாம் இருக்கும் போது ..நாம் நமது வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் .